இராக்கில் புகழ்பெற்ற மசூதி அருகே மனிதகுண்டு வெடிப்பு: 30 பேர் சாவு
இராக்கில் புகழ்வாய்ந்த மசூதி அருகே வியாழக்கிழமை மனிதவெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர். இராக் தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நஜப் நகரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. உலகெங்கும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனித நகரமாக இங்கு இமாம் அலி மசூதி உள்ளது. இம் மசூதியில் முகமது நபியின் மருமகனுடைய கல்லறை உள்ளது.
இந்த மசூதிக்கு எதிரே உள்ள நெரிசல் மிகுந்த சந்தையில், வெடிகுண்டு பெல்ட் அணிந்து ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி வந்தார். அவரைப் பிடித்து போலீஸôர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் 5 போலீஸôர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று நஜப் சுகாதாரத் துறை தலைவர் கூறினார்.
இதற்கிடையில் நஜப் நகரின் வேறொரு பகுதியில் மற்றொரு குண்டு வெடித்ததாகவும், அதனால் ஏற்பட்ட உயிர்சேதம் பற்றிய உடனடித் தகவல் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.