வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெண் குழந்தை கடத்தல்: வாலாஜா பெண்ணிடம் விசாரணை…!!
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவையை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர் சிகிச்சைக்காக கல்பனாவும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.
நேற்று இரவு குழந்தையுடன் கல்பனா படுத்து தூங்கினார். அதிகாலை 1 மணி அளவில் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் கல்பனா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் சிலரும், நர்சுகளும் ஓடி வந்தனர்.
அவர்களிடம் நடந்ததை கல்பனா கூறினார். இதைத் தொடர்ந்து அங்கு காவல் பணியில் இருந்த காவலாளியிடம் நர்சுகள் கேட்டனர். அப்போது அந்த காவலாளி இப்போதுதான் ஒரு பெண் ஒரு குழந்தையுடன் சென்றதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை பிடித்தனர். அவர் ஒரு குழந்தையை வைத்திருந்தார். அவரிடம் கேட்ட போது, ‘‘இது எனது மகளுக்கு பிறந்த குழந்தை, எனது பேத்தி. ஆஸ்பத்திரியில் எனது மகள் சிகிச்சையில் இருக்கிறார்’’ என்றார்.
இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அந்த பெண்ணின் மகளை காண்பிக்குமாறு நர்சுகள் கூறினர். அப்போது அந்த பெண் தனது மகளை காண்பித்தார். ஆனால் அவரது மகள் கர்ப்பிணியாக சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கல்பனாவின் குழந்தையை அந்த பெண் கடத்தியது உறுதியானது.
அந்த பெண் ஆஸ்பத்தியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் வாலாஜாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த குழந்தை மீட்கப்பட்டு கல்பனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating