வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது…!!
வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வகையீடு செய்யப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு திரட்டப்படா கழிவுகள் குப்பைகளை மாநகரசபை பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளது.
நாட்டின் சகல மாநகரசபைகளும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் அண்மையில் மாநகரசபை ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது வகையீடு செய்யப்பட்ட கழிவுகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் இந்த நியதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகள் கழிவுகளை அகற்றும் போது உக்கக்கூடிய, உக்காத மற்றும் பிளாஸ்டிக் கண்ணாடி ஆகிய மூன்று வகையீடுகளின் அடிப்படையில் வகையீடு செய்யப்பட்டு திரட்டி, ஒப்படைக்கப்பட வேண்டுமென அமைச்சு கோரியுள்ளது.
இந்த திட்டம் சில மாநகரசபைகளில் ஏற்கனவே அமுலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிரமமின்றி குப்பைகளை திரட்டுவதனால், கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதில் நகரசபைகள் பெரும் நெருக்கடிகள் எதிர்நோக்கி வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating