சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசி ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் ஆவேச தாக்குதல்…!!
ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தாயிப் நகரில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.
ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு புரட்சிப் படையினர் பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.
இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் சுமார் 3 கோடி மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தாயிப் நகரில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். அரபு கூட்டமைப்பை சேர்ந்த விமானப்படை அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டன? என்று கண்டுபிடித்து, ஏமன் நாட்டில் உள்ள சனா மற்றும் சாடா நகரங்களில் இருக்கும் ஹவுத்தி போராளிகளுக்கு சொந்தமான இரு ராணுவ தளங்களை பழிக்குப்பழியாக சவுதி அரேபியா தாக்கி அழித்ததாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating