சாலை விபத்தில் இறந்த காதலன் உயிரணுவின் மூலம் கருவை சுமக்க காத்திருக்கும் காதலி…!!
ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவோம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ் -அய்லா கிரஸ்வெல் இருவரும் காதலர்கள். ரக்பி வீரரான ஜோஷ்வா தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இருவீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஜோஷ்வா கடந்த ஆகஸ்ட் மாதம் சாலைவிபத்து ஒன்றில் மரணமடைந்தார். இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்த அய்லா, தனது காதலர் எப்போதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடி முடிவு ஒன்றை தமது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அய்லாவின் இந்த முடிவு இரு குடும்பத்தினருக்கும் சரி என்று பட்டதால், இறந்த ஜோஷ்வாவின் உயிரணுவில் இருந்து கருவுற முடிவு செய்த அய்லாவுக்கு ஆதரவளித்தனர்.
விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் உயிரணுக்களை அதற்கான வங்கிகளில் சேமித்து வைத்திருப்பது போன்று ஜோஷ்வாவும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தை நாடிய அய்லா, மறைந்த காதலர் ஜோஷ்வாவின் உயிரணுவை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜோஷ்வாவின் உயிரணுக்களின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்திருந்ததாகவும், தனது இந்த முடிவில் அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் எனவும் நீதிமன்றத்தில் அய்லா வாதிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. மேலும் சேமிக்கப்பட்டிருந்த ஜோஷ்வாவின் விந்தணு, கருவுறுதலை நிகழ்த்தும் அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கூடியவிரைவில், செயற்கை கருத்தரித்தல் மூலம் ஜோஷ்வாவின் குழந்தையை தனது வயிற்றில் அய்லா சுமக்க உள்ளார்.
“ஜோஷ்வாவும், நானும் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுருந்தோம். ஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும் அவரது கனவை நினைவாக்கும் முயற்சியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.”என அய்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Average Rating