திருப்பதி தனியார் ஆஸ்பத்திரியில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை…!!
திருப்பதி தொட்டாபுரம் தெருவில் தனியார் பல் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுபாஷ் நகரை சேர்ந்த துரை ராஜூ-லீலாவதி தம்பதியின் மகளான சந்தியா (வயது 19) வரவேற்பாளராக பணி புரிந்து வந்தார். இவர், கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல் ஆஸ்பத்திரியில் நேற்று பணியில் இருந்த மாணவி சந்தியா மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்து வந்த திருப்பதி போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பல் டாக்டர் கிஷோர் குமார் ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அவர், ‘‘தான் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த கொலை நடந்துள்ளதாக கூறினார். இதையடுத்து போலீசார், ஆஸ்பத்திரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.
அதில் கொலை சம்பவம் நடந்தது பதிவாகியுள்ளதா? கொலையாளி யார்? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். காதல் விவகாரத்தில் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆனால், கொலையாளி பற்றிய துப்பு எதுவும் போலீசாரிடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரைணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating