செல்பி எடுப்பதால் ரயில்வே போலீஸ் அதிரடி உத்தரவு..!!
ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்களில் செல்பி எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக இவற்றில் செல்பி எடுப்பதற்கு தடை விதித்துள்ளதுடன் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் செல்பி எடுப்பவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு விபத்துக்குள்ளாகி பலியாகும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் ஓடும் ரெயிலில் செல்பி எடுத்த பார்த்தசாரதி என்ற 22-வயதுடைய இளைஞர் தவறி விழுந்து மயங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட அவர் புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக பூந்தமல்லியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் செங்கல்பட்டு கடற்கரை ரயிலில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
இந்நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகள் மேலும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசின் ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவற்றில் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுகின்றவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரயில் விபத்துக்களில் 30 சதவீதம் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் கவனக்குறைவினால் நிகழ்வது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு ரயில்வே போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ரயில் நிலையங்கள், நடைமேடைகள்,ரயில்கள், தண்டவாளங்களில் செல்பி எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating