மஞ்சள் கடவையில் மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்…!!
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைப்பகுதியில் நேற்று(24) ஆறு மணி நேரத்துக்குள் ஒரே வீதியில் இருவேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் சந்தியிலிருந்து விளினயடிச்சந்தி வரைக்குமான 300மீற்றர் தூரத்துள் இடம்பெற்றுள்ளது.
முதல் விபத்து காலை அல்மர்ஜான் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் விஞ்ஞான பாட பரீட்சையை எழுதிவிட்டு வீடுசெல்வதற்காக கல்லூரிக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கடவையூடாக இரு ஆறாம்வகுப்பு மாணவிகள் நடந்து செல்கையில் எதிராக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் மோதியதால் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவிகளை உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் வேகம் காரணமாக அதனைக்கட்டுப்படுத்த முடியாத நிலையில் மஞ்சள் கோட்டில் வந்த மாணவிகள் மீது மோதியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அத்தோடு சம்பவம் இடம்பெற்ற போது குறித்த இரு இளைஞர்களும் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விபத்துச்சம்பவம் மாலை விளினயடிச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.
தாயும் மகளும் மஞ்சட்கடவையைக் கடக்கையில் எதிராகவந்த மோட்டார்சைக்கிள் மிக அருகாமையில் வந்து திடீரென நிற்க, பின்னால் வந்த பஸ் அதனை சற்று உரசியவாறு நிற்க இரண்டையும் முந்திச்செல்லமுயன்ற படிரக சிறிய லாறி மஞ்சட்கோட்டில் நின்ற தாயை மோதியுள்ளது.
இம்மூன்று வாகனங்களின் விபத்து ஒரே நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்துள் இடம்பெற்றதாக நேரில்கண்டோர் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் கூடுதல் விபத்துச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating