விண்வெளிக்கு சென்ற ரஷியாவின் சரக்கு விண்கலம் வெடித்து சிதறியது….!!
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியின் மேற்பரப்பில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரஷியாவுக்கு சொந்தமான ‘சோயுஸ்’ விண்கலத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
ஆண்டுக்கு மூன்று அல்லது நான்குமுறை இதுபோல் சரக்குகளை ஏற்றிச்செல்லும் விண்கலங்கள், விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் பொருட்களை இறக்கிவிட்டு, பூமிக்கு திரும்பும் வழியில் அண்டவெளியில் எரிந்து, சாம்பலாகி விடுவது வாடிக்கையாக உள்ளது.
அவ்வகையில், சுமார் 2.4 டன் எடைகொண்ட உணவு, எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ‘MS-04’ என்ற விண்கலத்தின் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
சோயுஸ் ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட ‘MS-04’ விண்கலம் புறப்பட்ட 383 வினாடிகளில் தீக்கோளமாக வெடித்துச் சிதறி ரஷியாவின் துவா மலைப்பகுதி அருகே தரையில் விழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோல் விண்வெளிக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற ஒரு விண்கலம் வெடித்து சிதறியது நினைவிருக்கலாம்.
Average Rating