பாகிஸ்தான் தொழிலாளியை கொலை செய்த வழக்கு: இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை…!!
பாகிஸ்தான் தொழிலாளி கொலை வழக்கில் கைதான இந்தியர்கள் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அமீரக கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
அபுதாபி அருகே அல் அய்ன் பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர். இங்கு இருந்த பாகிஸ்தான் தொழிலாளி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்தியர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பான வழக்கு அமீரக அல் அய்ன் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. கொலை வழக்கில் கைதான 11 பேரில், 10 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் 11 பேரும் சேர்ந்து 2 லட்சம் திர்ஹாம் (சுமார் ரூ.36 லட்சத்து 71 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள், அபுதாபியில் உள்ள கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இந்திய தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி தினேஷ் குமார் கூறுகையில், “மரணதண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் தீர்ப்பை எதிர்த்து அபுதாபி கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு இந்திய தூதரகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தீர்ப்பு ஆவணங்களை கொண்டு இந்த மாதத்துக்குள் மேல் முறையீடு செய்யப்படும்”என்றார்.
Average Rating