காணாமல் போன ஜே.என்.யு. மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கேட்கும் தாய்…!!
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நஜீப் அகமத் என்ற மாணவர் இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இவரை கண்டுபிடிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நஜீப் அகமதின் தாயார் பாத்திமா நபீஸ் தலைமையில் இன்று சில சமூக நல ஆர்வலர்கள் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் நஜீப் அகமதின் சொந்த ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் சமூக நல ஆர்வலர்களுடன் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் சில இயக்கத்தினரும் பங்கேற்றனர்.
‘என் மகன் காணாமல் போனது குறித்து பல நாட்களாக நீடிக்கும் மர்மத்தை கண்டறிய இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், என் மகனை கண்டுபிடிக்க மத வேறுபாடின்றி உதவி வருபவர்களுக்கும் நன்றி. அவனை கண்டுபிடிக்கும் வரை அனைவரும் துணைநிற்க வேண்டும்’, என நஜீப் தாயார் பாத்திமா நபீஸ் தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் அரசு மற்றும் காவல் துறையினரை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த பட்ட மேற்படிப்பு மாணவரான நஜீப் சக மாணவர்களுடனான மோதலில் ஈடுபட்டு, அதன் மறுநாள் முதலே காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன நஜீபை கண்டறிவது குறித்த தகவல் வழங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக டெல்லி காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று வரை காவல் துறையின் குற்றப் பிரிவினரால் நஜீபை கண்டறிய முடியவில்லை.
Average Rating