உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆவணங்களை தீ வைத்து எரித்த மர்ம கும்பல்…!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் இருந்து நைனா குப்பம் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே ஓடை உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் சாக்கு மூட்டைகளுடன் ஓடைப்பகுதிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த மூட்டைகளை அவிழ்த்து அதில் இருந்தவற்றை தீ வைத்துக்கொளுத்தினர். அவை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதனை அறிந்த செங்குறிச்சி பகுதி பொது மக்கள் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
பாதி எரிந்து கொண்டிருந்த பேப்பர்களை பொதுமக்கள் கையில் எடுத்து பார்த்த போது அவை வாக்காளர் பட்டியல், திருமண உதவி தொகை விண்ணப்பம், உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை, அரசின் ஆவணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச சேவைகள் என்பது தெரிய வந்தது.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசுக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆவணங்களை எரித்த மர்ம கும்பல் யார்? எதற்காக அதனை எரித்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating