வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் 3-வது மாடியில் இருந்து குதித்த புதுமாப்பிள்ளை: உயிருக்கு போராட்டம்…!!
அணைக்கட்டு அடுத்த பாக்கம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). கூலித் தொழிலாளி. கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை திட்டியதாக தெரிகிறது. வேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று விஷத்தை குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டீன் அறை அருகே உள்ள கட்டிடத்தின் 3-வது தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் அவர் தான் சிகிச்சை பெற்ற அறையின் ஜன்னல் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்துக் கொண்டு கீழே குதித்தார். இதில் கீழே தரையில் வந்து விழுந்த அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையிலேயே அவரை அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating