கள்ளத்தொடர்பு விவகாரம்: போலீஸ்காரரை கொன்று பிணத்தை எரித்த கல்லூரி அதிபர்…!!
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அருணகிரி (வயது 35). இவர் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்து வந்தார். இவருடைய மனைவி நெய்ரோஜா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நெய்ரோஜாவின் அக்காள் கணவர் சிவானந்தம் ராபர்ட் (45). இவர் தவளக்குப்பத்தில் பி.எட். கல்லூரி நடத்தி வருகிறார்.
நெய்ரோஜாவுக்கும் சிவானந்தம் ராபர்ட்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக அருணகிரி சந்தேகித்தார். இதனால் கோபம் அடைந்த அவர் சிவானந்தம் ராபர்ட்டை தாக்கினார்.
இதில் ஆத்திரம் அடைந்த சிவானந்தம் ராபர்ட் போலீஸ்காரர் அருணகிரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக கடலூரை சேர்ந்த நண்பர் முத்துராஜ் மற்றும் புதுவையை சேர்ந்த கர்ணாஜோதி ஆகியோரை ஏற்பாடு செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி இரவு அவர்கள் 3 பேரும் அருணகிரியை மது குடிக்கலாம் என கூறி நைசாக அழைத்து சென்றனர். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே அமர்ந்து மது குடித்தனர். போதையில் இருந்த அருணகிரியை மதுபாட்டிலால் அடித்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது பிணத்தை காரில் கடலூருக்கு கடத்தி சென்றனர். கடலூரை சேர்ந்த வெங்கட், சதீஷ்குமார் உதவியுடன் பிணத்தை காட்டு பகுதியில் வைத்து எரித்தனர். பின்னர் அந்த சாம்பலை கடலில் கரைத்தனர்.
அருணகிரியை, சிவானந்தம் ராபர்ட் கொலை செய்தது குடும்பத்தினருக்கு தெரியாது. அருணகிரி எங்கோ மாயமாகி விட்டதாக கருதினார்கள். இதுபற்றி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் பலமாதமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிவானந்தம் ராபர்ட்டை அழைத்து விசாரித்தனர். அதில், நடந்த விஷயங்கள் தெரியவந்தன.
இதையடுத்து சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சதீஷ்குமார், வெங்கட், கர்ணாஜோதி ஆகியோரை தேடிவருகின்றனர்.
Average Rating