நேர்முகம்…!! விமர்சனம்
நடிகர் ரபீ
நடிகை மீனாட்சி
இயக்குனர் முரளி கிருஷ்ணா
இசை முரளி கிருஷ்ணா
ஓளிப்பதிவு ஜெகதீஷ் விஸ்வம்
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார்.
இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.
சைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நேர்முகம்’ கோணல்.
Average Rating