போலீஸ்காரரை விடுவிக்கும் புலிகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்திச் சென்ற சிங்கள போலீஸ்காரர் ஒருவரை விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய சம்மதித்துள்ளனர். இதுகுறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில, கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும் உல்ப் ஹென்ரிக்சனும், புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள நார்வே நாட்டின் லார்ஸ் ஜோகன்சோல்வ்பர்க்கும் வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனை சநிதித்துப் பேசினர்.
விடுதலைப் புலிகள் 3 போலீஸ்காரரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறை பிடித்தனர். அவர்களில் 2 பேரை ஏற்கனவே விடுவித்து விட்டனர். ஒருவர் மட்டும் தொடர்ந்து பிடியில் இருந்து வந்தார். அவரை விடுவிக்குமாறு தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார் ஒமர்சன்.
இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்ற உள்ள ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகிள் இன்னும் சில தினங்களில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் புலிகள் அமைப்புக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தக் குழுவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் விலக வேண்டும் என புலிகள் கோரிக்கை வைத்தது நினைவிருக்கலாம்.