புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள்..!! (கட்டுரை)

Read Time:22 Minute, 29 Second

article_1483620313-article_1479829797-aubeகடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனக் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளை, மேலும் நான்கு நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற சில சம்பவங்களே, அந்த உத்தேச அரசியலமைப்பைப் பற்றிப் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன.

அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் புதிய அரசியலமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி, அரசாங்கங்கள் அடிக்கடி கூறி வருகின்றன. ஆனால், 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 17 ஆம், 18 ஆம் மற்றும் 19 ஆம் அரசியலமைப்புத் திருத்தங்களை மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. அவையும் சம்பந்தப்பட்ட எல்லோரும் மனப்பூர்வமாக இணங்கி நிறைவேற்றிக் கொள்ளப்பட்டவையல்ல. பலர் நிர்ப்பந்தங்கள் காரணமாகவே அவற்றுக்கு இணக்கம் தெரிவித்தனர். எனவேதான், அவற்றில் முதல் இரண்டும் குறுகிய காலத்துக்குள் மாற்றியமைக்கப்பட்டன. அவை மக்களின் அபிலாஷைகளை எந்தளவு நிறைவேற்றின என்பதும் முக்கிய கேள்வியொன்றாகும். அதேபோல் உத்தேச புதிய அரசியலமைப்புக்கும் அரசியல்வாதிகளிடையேயும் பொது மக்களிடையேயும் எந்தளவு இணக்கம் ஏற்பட முடியும் என்பதை ஆராய்ந்து பார்ப்பதும் முக்கியமாகும்.

அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டதை அடுத்து, 1796 ஆம் ஆண்டு அந்நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றிக் கொண்ட அரசியலமைப்பே இன்னமும் அங்கு நடைமுறையில் உள்ளது. இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்து 1951 ஆம் ஆண்டு நிவைவேற்றிக் கொண்ட அரசியலமைப்பே இன்னமும் அந்நாட்டில் அமுலில் இருக்கிறது. அவற்றை மாற்றி, புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்நாடுகளில் எவரும் கூறுவதில்லை. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் 1947, 1972 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் மூன்று புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு 19 முறை திருத்தப்பட்டு தற்போது மீண்டும் முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது. அரசியலமைப்புக்கள் அல்லது அரசியல் யாப்புகள் அவ்வாறு ஓரிரு தசாப்தங்களில் மாற்றி அமைக்கப்பட வேண்டியவை அல்ல. சிறுசிறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அடிப்படை அரசியலமைப்பு பல தலைமுறைகள் வரை நீடிப்பதுதான், அந்த ஆட்சி அமைப்பின் ஸ்திரத்தன்மையை எடுத்துக் காட்டும். அரசியல் கட்சிகளின் நோக்கங்களுக்கு ஏற்ப அல்லாது, மக்களினதும் நாட்டினதும் எதிர்க்கால நலனைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டதனாலேயே, அமெரிக்க அரசியலமைப்பு இன்னமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாது 200 வருடங்களுக்கு மேலாகவும் நிலைத்து நிற்கிறது.

மக்களினதும் நாட்டினதும் எதிர்கால நலனைக் கருத்தில் கொள்ளாது, அரசியல் கட்சிகளினதும் ஆட்சியாளர்களினதும் உடனடித் தேவைகளைக் கருத்திற் கொண்டு வரையப்பட்டதனாலேயே இலங்கையில் 68 வருடங்களில் நான்காவது அரசியலமைப்பையும் வரைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையா? தேவை தான். நாட்டில் தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையானது ஒரு வித சர்வாதிகார ஆட்சியாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்பதை மஹிந்த ராஜபக்ஷ நிதர்சனமாகக் காட்டினார். அது மாறவேண்டும். அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள தேர்தல் முறையானது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

செல்வந்தர்களுக்கு சாதகமாகவே தற்போதைய மாவட்ட விகிதாசார தேர்தல் முறை அமைந்துள்ளது. அத்தோடு விருப்பு வாக்கு முறையானது, வன்முறைக்கு உந்து சக்தியாகியுள்ளது. அதுவும் மாறவேண்டும். இலங்கையின் நீதித்துறை ஊழல் மலிந்ததாகவே காணப்படுகிறது. ரவிராஜ் கொலை வழக்கைச் சுட்டிக் காட்டி, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதித்துறை மாறவேண்டும் என்று கூறியிருந்தார். ஐ.நா சபை, இலங்கையின் நீதித்துறை நம்பகத்தன்மையற்றது எனக் கூறியே, மனித உரிமை வழக்குகளை விசாரிக்கச் சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்கிறது. இனப் பிரச்சினையும் அரசியலமைப்பு ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

எனவே, அரசியலமைப்பு மாற வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இதுவரை அனைத்து அரசியலமைப்புகளும் அந்தந்தக் காலத்தில் ஆட்சியாளர்களின் உடனடித் தேவைகளைக் கருத்திற் கொண்டே வரையப்பட்டுள்ளன. உதாரணமாக, தமது கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அதன் பின்னரும் தமது பொருளாதார நலன்கள் அந்நாடுகளில் பாதுகாக்கப்படும் வகையில், அந்நாடுகளில் அரசியலமைப்புகளை வரைய நிர்ப்பந்தித்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்பை பிரிட்டிஷ்காரரான ஐவோ ஜெனிங்ஸே 1947 ஆம் ஆண்டு வரைந்தார். 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர், தெற்கில் கிளர்ச்சியொன்றை நடத்தினர்.

அப்போது அவர்கள் இந்த மறைமுக பிரிட்டிஷ் ஆட்சியை விமர்சித்தனர். இதனால் அந்தக் கிளர்ச்சியை அடக்கிய பின்னர், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அந்த நிலைமையை மாற்றி அமைக்க நினைத்தார். எனவேதான், அவர் பிரிட்டனிடமிருந்து பூரணமாக விடுதலை பெற்ற குடியரசாக நாட்டை பிரகடப்படுத்தும் முதலாவது குடியரசு அரசியலமைப்பை 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றினார். 1977 ஆம் பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தன நாட்டில் தாராள பொருளாதார முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தார். ஏனெனில், அதுவரை கடைப்பிடிக்கப்பட்ட தேசியமயமாக்கல் கொள்கையின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருந்தது. அக்காலத்தில் தாராள பொருளாதார முறைக்கு எதிரான இடது சாரிக் கொள்கைகள், நாட்டில் பலம் வாய்ந்த சித்தாந்தமாக இருந்தன.

ஏழு ஆண்டு கால சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் தொற்றிக் கொண்டு இருந்த இடதுசாரிகளின் தொழிற்சங்கங்களும் அந்த ஏழு ஆண்டு கால அரசாங்க உதவியின் காரணமாக அக் காலத்தில் பலமாக இருந்தன. எனவே, அந்த எதிர்ப்புகளைச் சமாளித்து, தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தப் பலமானதும் எதிர்ப்புக்களை அடக்கக் கூடியதுமான அரசாங்கம் ஒன்று அவசியம் என ஜே.ஆர் நினைத்தார். எனவேதான், அவர் பெருமளவில் அதிகாரத்தைக் குவித்துக் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய மற்றுமொரு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தார். அதுவரை தொகுதி ரீதியாக ஐ.தே.க தோல்வியடைந்த தேர்தல்களிலும் அக்கட்சியே ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தனால், தொடர்ந்தும் அக்கட்சியே பதவியில் இருப்பதற்காக விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் நியாயமானதும் பலமானதுமான அரசாங்கங்களை உருவாக்கக் கூடிய அதேவேளை பலமானதும் ஊழலற்றதுமான நீதித்துறையை உருவாக்கக் கூடிய அரசியலமைப்பொன்றைத் தயாரிக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் அப்போதைய தேவையை மட்டுமே அவர்கள் கருத்திற் கொண்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அதுவே நடந்தது. மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பாவித்துத் தம்மை அடக்கி ஆள்வதனாலும் அம்முறையைப் பாவித்து அவரது அதிகாரத்தை மென்மேலும் பலப்படுத்தி வந்தார். எனவே, அவற்றினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திபால உள்ளிட்ட சிலரும், ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களும் ஆட்சி மாற்றத்தையே இலக்காகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியினரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்; நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்றனர்.

மக்களும் அது நல்ல ஆலோசனை என ஏற்றுக் கொண்டனர். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், வரலாறு காணாத அளவில் ஊழல்கள் மற்றும் வீண் விரயம் இடம்பெற்று வந்தமையினால் மக்கள் வெறுப்புற்று இருந்தனர். அந்த வெறுப்பைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக மைத்திரி அணியினரும் ஐ.தே.கவும் ஊழலையும் விரயத்தையும் ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தனர். விருப்பு வாக்கு முறையினால், கடந்த காலத்தில் ஏறத்தாழ நாட்டில் சகல வாக்காளர்களும் அதிருப்தியடைந்திருக்கலாம். அதேவேளை, தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையில் பல குறைபாடுகள், கடந்த சில தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. எனவே, புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்த அரசியல் கட்சிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வந்துள்ளன. இதனையும் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போதைய ஆட்சியாளர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பாவித்தனர்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்கள் வெகுவாக அவமானப்படுத்தப்பட்டனர். அதேவேனை, தமிழ் மக்கள் நீண்ட காலமாக இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் கோரி வருகின்றனர். எனவே, மஹிந்த விரோதிகள் அதனையும் தேர்தல் வாக்குறுதியாக்கினர். இதனையல்லாது, நீண்ட காலப் பார்வையில் நாட்டில் அரசியல் அமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைப் பற்றிச் சிந்தித்து, அதற்குரிய வகையில் செயற்படவோ, கஷ்டங்களை எதிர் நோக்கவோ நாட்டின் தலைவர்களுக்கு தேவை இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு, வாக்குறுதிகளை வழங்கிப் பதவிக்கு வந்த அரசாங்கத்தின் ஆரம்பம் ஊக்கமளிப்பதாகவும் எதிர்பார்ப்புகளைத் தருவதாகவும் அமைந்தது. அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.

ஆனால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறவே, பெருமளவில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஊழல்களை முறியடிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. வடமாகாணத்துக்கு சிவிலியன் ஆளுநர் ஒருவரை நியமித்தல், முதலமைச்சரோடு இணைந்து செயற்படக் கூடிய மாகாண பிரதம செயலாளர் ஒருவரை நியமித்தல் போன்ற தமிழ் தலைவர்களின், மிக இலகுவான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. நல்லிணக்கத்துக்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலும் முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையிலும் இரண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன.

வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தமிழ்நெற் போன்ற இணையத்தளங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டது.அரசாங்கத் தலைவர்கள் பல வெளிநாட்டுத் தலைவர்களிடம் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்கள் அத்தலைவர்களுடன் நடந்து கொண்ட முறை, ஆகியவற்றின் பயனாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரின்போது, இலங்கை தொடர்பாக, எவ்வித பிரேரணையும் நிறைவேற்றப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணையாளராக நின்று, ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம், போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்ய, அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

ஆனால், பின்னர் நிலைமை மாறத் தொடங்கியது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய விரும்பினாலும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுவதால் அதனைச் செய்ய முடியாதிருப்பதாக இப்போது கூறப்படுகிறது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே, அதனைச் செய்ய வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராகத் தம்மை அறிமுகப்படுத்திய அன்றே மைத்திரிபால சிறிசேன கூறினார். இப்போது அந்த வாக்கெடுப்பை ஒரு தடையாகக் கருதுகிறார்கள். ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பிதற்றிய தலைவர்களின் இந்த அரசாகத்தின் காலத்தில் வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் சம்பவம் ஒன்று (பிணை முறி மோசடி)இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், கிரிஎல்ல போன்ற சில அரச தலைவர்கள், அந்த ஊழல் பேர்வழிகளை வெட்கமின்றி, வெளிப்படையாகவே பாதுகாத்துப் பேசுகிறார்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் பேர் வழிகள் தொடர்பான விசாரணைகளும் ஏமாற்று வித்தையாகவே மாறி வருகின்றன. அந்த விடயத்தில் அரசாங்கம், படையினரும் பிக்குகளும் கோபித்துக் கொள்ளலாம் என்ற பயத்தோடுதான் செயற்படுகிறது. இந்தப் பயம் இனப்பிரச்சினை விடயத்திலும் அரசாங்கத்திடமிருந்து காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, அரசியலமைப்புத் தயாரிக்கப்படும் முன்னரே, அரசாங்கத் தலைவர்கள் சமஷ்டிக்கு இடமில்லை என்றும், ஒற்றை ஆட்சிமுறை மாறாது என்றும், பௌத்த சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறிவருகிறார்கள்.

அதேவேளை, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக் கணக்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றும், ஆயிரக் கணக்கான கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தும் சமஷ்டி, வடக்கு, கிழக்கு இணைப்பு, அதிகாரப் பரவலாக்கல், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பான தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு மாறவில்லை.

அரச அமைப்பு முறை, ஊழல் ஒழிப்பு மற்றம் மற்றும் இனப் பிரச்சினை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இவ்வாறான நிலைமையொன்று நாட்டில் இருக்கும்போது தான், அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றி அமைக்கப்போகிறது. எனவேதான், இது சாத்தியமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டோம். அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மக்கள் கருத்தறிய, லால் விஜேநாயக்கவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு திரட்டப்பட்ட மக்களின் கருத்துக்களை அரசாங்கம் எவ்வாறு வடித்தெடுத்துப் பாவிக்கப்போகிறது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

ஆரம்பம் முதல், அரசாங்கம் பெரும் நெருக்குவாரத்தின் மத்தியிலேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் பதவிக்கு வருவதற்காகவும் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குப் பலம் இல்லாத பிரதமர் ஒருவரை ஜனாதிபதி, தாம் பதவிக்கு வந்த உடன் நியமித்தார்.

பொதுத் தேர்தலில் தமக்குப் போதிய பலம் கிடைக்காததால் நாடாளுமன்றத்தில் தமது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகப் பதவிக்கு வரும் முன்னரே, அமைச்சுப் பதவிகளை இலஞ்சமாகக் கொடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் சிலரும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஒருபுறம் அரசாங்கத் தலைவர்கள் பலர் நேர்மையின்றிச் செயற்படுகின்றனர். மறுபுறத்தில், அவர்கள் கூறிய படி நல்லாட்சிக் கொள்கைகளைக் கடைபிடித்து நடக்க முடியாதவாறு நிலைமைகள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு என்பது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. –

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தால் விஷாலுக்கு ‘நோ’ சொன்ன அக்‌ஷரா ஹாசன்..!!
Next post பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?..!!