சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 42 Second

maithripala (3)ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்றொரு தீர்மானத்தை, அந்தக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார்.

எனினும், அத்தகையதொரு தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரே அதனை வலியுறுத்தி இருக்கின்றனர் என்றும் சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலும், அதில் போட்டியிடும் வேட்பாளர் விடயத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இப்போதே சர்ச்சைகள் எழும்பத் தொடங்கி விட்டன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், அதில் போட்டியிடும் வேட்பாளரை, இப்போதே முன்னிறுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முயற்சிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்தளவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார். கடந்த 2015 ஜனவரி எட்டாம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர், இந்த வாக்குறுதியை அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதி விடயத்தில், தாம் உறுதியாக இருப்பதாகப் பின்னரும் சில தடவைகள் அவர் கூறியிருந்தார்.
தனது பதவிக் காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாதொழிக்கப்படும் என்பதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று.

ஏற்கெனவே, 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு விட்டன.

ஆனாலும், இன்னமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைதான், இலங்கையில் நீடிக்கிறது. இதனையும் இல்லாமல் செய்து, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிப்பதே, தற்போதைய அரசாங்கத்தின் பிரதான வேலைத் திட்டமாக – தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டுமா இல்லையா என்ற விடயத்தில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கருத்து ஒற்றுமை இல்லை என்பதையே சுதந்திரக் கட்சியில் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவு சுட்டிக்காட்டுகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படக்கூடாது என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், 2020 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தளவுக்கும் அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான். இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மௌனமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.

‘மௌனம் சம்மதம்’ என்று சொல்லப்படுவது வழக்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மௌனமாக இருந்து, தனது சம்மதத்தைக் கொடுத்தாரா என்று தெரியவில்லை.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவோ, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்று முன்வைத்த யோசனையே அது என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு அல்ல என்றும் கூறியிருக்கிறார்.

அதேவேளை, அவர் இன்னொன்றையும் நினைவுபடுத்தியிருக்கிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதே அதுவாகும்.

இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முடிவுக்குச் சென்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி, ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கவில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா – நடக்காதா என்றொரு நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. ஏனென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு விடும்; எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பிருக்காது என்று நம்பப்பட்டது.

ஆனால், நிச்சயம் நடக்கும் என்பது போன்ற கருத்தையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது வலியுறுத்தியிருக்கிறது. அதுவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தவரையே, அதே பதவிக்கு மீண்டும் முன்னிறுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதிலிருந்து, நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை இல்லாதொழிக்கும் விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இரட்டைவேடம் பூண்டிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
ஒரு பக்கத்தில் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவது போல காட்டிக் கொண்டாலும், மறுபக்கத்தில் நிறைவேற்று அதிகாரத்தின் பிடியைத் தனது கட்டுப்பாட்டில் இருந்து வெளிச்செல்லாமல் பாதுகாக்கவும் முனைகிறது.

பொதுவேட்பாளராக நின்று போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே, தமது தலைவராக மாற்றியதன் மூலம், அவரைத் தமது கட்சிக்குரியவராகவும் உருமாற்றம் செய்திருக்கிறது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.

இந்தளவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்கவுமில்லை. அந்தக் கட்சியின் பெரும்பான்மையான வாக்காளர்கள், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கவுமில்லை.

ஆனால், இப்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்க முனைகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை அடக்குவதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இத்தகைய செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டிய தேவை ஐ.தே.கவுக்கு இருக்கிறது. அதனைச் சுதந்திரக் கட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.

இந்த விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது முக்கியமான கேள்வி.

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருப்பவர் அவர் தான். அதைவிட, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதையும் அவர் கூறியிருந்தார்.
அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தமைக்கு முக்கிய காரணம், தனது பதவிக் காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு விடும் என்பதேயாகும்.

எனவே, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலோ, அதில் போட்டியிடும் தேவையோ, தனக்கு ஏற்படாது என்றே அவர் நம்பியிருந்தார். அதைவிட, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கொடுத்திருந்த வாக்குறுதிகளைத் தன்னால் நிறைவேற்றி விட முடியும் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்து சென்றிருக்கும் இரண்டு ஆண்டுகளில், அவருக்குப் பல உண்மைகளை எடுத்துச் சொல்லியுள்ளன.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அவருக்கே பலத்த அவநம்பிக்கைகள் தோன்றியிருக்கின்றன. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு விடயமும் கூட, சாத்தியமாகும் என்ற நம்பிக்கை அவருக்கு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம், இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்று நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அணியினர் கோத்தாபய ராஜபக்ஷவைக் களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் களமிறக்க, ஐ.தே.க தயங்கும் என்ற கணிப்பு சுதந்திரக் கட்சியிடம் உள்ளது.

எனவே, மீண்டும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய தேவை ஐ.தே.கவுக்கு எழும் என்றும், அவ்வாறு பொதுவேட்பாளராகத் தகுதி பெற்றுள்ள ஒரே ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதுமே சுதந்திரக் கட்சியினரின் கணக்கு.

அதனால்தான், அதில் எப்படியாவது மைத்திரிபால சிறிசேனவைப் போட்டியிட வைப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் சுதந்திரக் கட்சியின் கைக்குள் வைத்திருப்பதே அவர்களின் திட்டம்.
அரசியலமைப்பு மாற்றம் என்பது, சாத்தியப்படாது போனால், மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் 2020இல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

அத்தகைய சூழலில், தனது முன்னைய முடிவை மாற்றிக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போட்டியிட இணங்குவாரேயானால், அவரும் முன்னைய ஜனாதிபதிகளைப் போன்ற சராசரி தலைவர்களில் ஒருவராகவே கணிக்கப்படுவார்.

தன்னை ஒரு வித்தியாசமான தலைவராக காட்டிக் கொள்வதிலேயே மைத்திரிபால சிறிசேன, ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

தனது வாக்குறுதிகளைத் தனது பதவிக் காலத்துக்குள் நிறைவேற்றுவதன் மூலமே அவரால், அந்த வேறுபட்ட தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய ஒரு ஜனாதிபதியாக மீண்டும் அவரை முன்னிறுத்தச் சுதந்திரக் கட்சி முனைந்தால், மைத்திரிபால சிறிசேன தோற்றுப்போன தலைவர்களில் ஒருவராகக் கூட இடம்பிடிக்க நேரிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவானிசாகரில் போலீஸ் நிலையம் பின்புறம் பெண் பிணம் கற்பழித்து கொலையா?..!!
Next post எலும்புத் தேய்வு வருவதற்கான காரணமும் – தீர்வும்..!!