வவுனியா உண்ணாவிரதிகளின் உடல் நிலை மோசம்..!!
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர் குழு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிலையில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் அவர் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உண்ணாவிரதிகளின் உடல்நிலை குறித்து வவுனியா வைத்தியசாலை வைத்தியரிடம் கேட்டறிந்துகொண்டார்.
மாலை மூன்று மனிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகனபுஸ்பகுமார உண்ணாவிரதிகளை நேரில் சந்தித்து விசாரித்ததுடன் அவர்களுடைய நியாயங்களையும் கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் நாளை பேரணியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது.
மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இன்றயை தினம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், வட மாகாண முதலமைச்சரின் பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, செ. மயூரன், கிறிஸ்தவ மத தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலநதுகொண்டிருந்தனர்.
Average Rating