லோன் தர மறுத்ததால் கற்பழிப்பு நாடகம் நடத்தி வங்கி அதிகாரியிடம் பணம் பறிப்பு – இளம்பெண் கைது..!!
திருவனந்தபுரம் பால் குளங்கரை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் வினோத், (வயது 33). இவர், அலுவலகத்தில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜீனத் (38) என்ற பெண், வங்கிக்கு சென்று வினோத்தை சந்தித்தார்.
தனக்கு ரூ.5 லட்சம் வங்கி லோன் கிடைக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். முறையான ஆவணங்கள் கொடுத்தால் லோன் வழங்கலாம் என்று வினோத் கூறி அனுப்பிவிட்டார். ஆனால் ஜீனத் அவரை தொடர்ந்து சந்தித்து தனக்கு லோன் வழங்குவது பற்றி வற்புறுத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் தனக்கு வங்கி கடன் வழங்கினால் தான் அவருக்கு எதையும் தர தயாராக இருப்பதாக ஜீனத் ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவரது பேச்சுக்கு மயங்கிய வினோத், தனது வீட்டிற்கு வரும்படி ஜீனத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அவரும் குறிப்பிட்ட நாளில் வினோத் வீட்டிற்கு சென்றார். அவரிடம் வினோத் பேசிக்கொண்டிருந்தபோது ஜீனத் திடீரென கூச்சல் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு 2 பேர் வீட்டிற்குள் வந்தனர். அவர்களிடம் வங்கி அதிகாரி வினோத் தன்னை கற்பழித்து விட்டதாக கூறி ஜீனத் கண்ணீர் விட்டார்.
உடனே அந்த 2 வாலிபர்களும் வினோத்தை மிரட்டினார்கள். நடந்த சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க பணம் தரும்படி கேட்டனர். இதனால் பயந்து போன வினோத், தன்னிடமிருந்த 2 பவுன் தங்க செயின், ரூ.26 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை கொடுத்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை மிரட்டி, செக்கில் ரூ.5 லட்சத்திற்கு கையெழுத்து பெற்றுக்கொண்டு சென்று விட்டனர். இதுபற்றி வினோத் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ஜீனத், அவரது கூட்டாளிகள் சுரேஷ் (39), ஹரி (42) ஆகியோரை கைது செய்தனர். இந்த கும்பல் இதுபோல பலரிடம் பணம் பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating