திருகோணமலையில் மீண்டும் மோதல்கள்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை இலங்கை இராணுவம் தமது நிலைகளை நோக்கி முன்னேறும் முயற்சியில் தாக்குதல்களை நடத்தியதாக ்புலிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டம் தோப்பூர் மற்றும் பச்சனூர் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது தமது படையினர் இதை எதிர்த்து பதில் தாக்குதல்களை நடத்தினர் என புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
சம்பூர் பகுதியை கைப்பற்றும் முகமாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் எழிலன் தெரிவித்துள்ளார். தமது தரப்பில் இது வரை மூன்று பேர் பலியாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார். இந்தத் தாக்குதலின் போது ஈச்சலம்பற்றுக்கு அருகில் இருக்கும் பாலம் சேதமடைந்துள்ளது எனவும் மேலும் எழிலன் தெரிவித்துள்ளார்
இராணுவம் மறுப்பு
ஆனால் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, நேற்று காலை செல்வநகர் மற்றும் தோப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் மீள்குடியேற உதவும் முகமாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து இந்தத் தாக்குதலை முதலில் தொடங்கியது விடுதலைப்புலிகள்தான் எனவும், இராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தியாதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பூர் நகரை கைப்பற்றும் எந்த ஒரு முயற்சியும் இராணுவத் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய தாக்குதலில் இராணுவத் தரப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறினார் இராணுவப் பேச்சாளரான பிரசாத் சமரசிங்க.
இந்த மோதல்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும், விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்தினால் இராணுவமும் உடனே தாக்குதலை நிறுத்தும் எனவும் கூறினார்