ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்..!!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தில் சந்தேகமுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) நிறுவுநர் உறுப்பினரும் தமிழ்நாடு சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன், அவர் நஞ்சுவைக்கப்பட்டதாகச் சந்தேகம் வெளியிட்டார்.
தமிழகத்தின் முதலமைச்சராக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா பதவியேற்கவுள்ள நிலையிலேயே, சிரேஷ்ட உறுப்பினரான பாண்டியனின் குற்றச்சாட்டு, முக்கியமானதாக அமைந்துள்ளது. சென்னையில் நேற்று நடந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பாண்டியனோடு, அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியனும் கலந்துகொண்டனர்.
செப்டெம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற மோதலொன்றில் ஜெயலலிதா காயமடைந்ததாகவும், அது தொடர்பான சந்தேகத்தை மறைப்பதற்காகவே அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என வெளியாகியிருந்த ஊடக அறிக்கைகளை தான் பார்த்ததாக அவர் தெரிவித்தார். “அவர் (ஜெயலலிதா) மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும், அவரை யாரோ தள்ளியதன் காரணமாக போயஸ் கார்டனில் அவர் விழுந்ததாவும் நான் அறிந்தேன். சந்தேகத்தை நீக்கவே, அவர் வைத்தியசாலைக்கு எழுத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரிய அவர், “இந்த நபர்கள் பதவிக்கு வருகின்றமை” தொடர்பில், அச்சத்துடன் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தவிர, முதலமைச்சர் ஆகுவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி காணப்படுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். “கவுன்சிலர் பதவி கூட அவருக்கு (சசிகலா) கிடைத்திருக்கவில்லை. அம்மாவின் அரசியல் வாரிசாக அவர் எவ்வாறு வர முடியும்?” என்று அவர் கேட்டார்.
Average Rating