சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்..!!
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால், சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கருதிய நீதிபதிகள், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதியின் முன் சரணடைய உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்று பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் மாலை 6.20 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகள் சுதாகரன் சார்பில் நீதிபதி முன் ஆஜரான அவரது வக்கீல் சுதாகரனுகு உடல்நிலை சரியில்லை, எனவே இன்று சரண் அடைவதில் இருந்து அவருக்கு ஒருநாள் விலக்கு அளிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிபதி நாளை சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிட்டதாக முன்னர் தகவல் வெளியானது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவர் சரண் அடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்றிரவு 7 மணியளவில் சுதாகரன் நீதிபதியின் முன் சரண் அடைந்தார். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டாரா?, அல்லது, மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்படுவாரா? என்பது தொடர்பாக இன்றிரவு 8 மணிவரை உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கைதி எண்ணாக 10,711 மற்றும் இளவரசிக்கு கைதி எண்ணாக 10,712-ம் அளிக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating