வரதட்சணை கொடுமை- குடும்பம் நடத்த மறுப்பு: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா..!!
கோவை கணுவாய் காமராஜ் நகரை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 25) கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி (22). இவர்களுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சபர்ணாஸ்ரீ என்ற 3 வயது சிறுமியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கீதாஞ்சலிக்கு தாய்-தந்தை இல்லை. உடன் பிறந்தவர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின் போது 4 பவுன் நகை வரதட்சணையாக கீதாஞ்சலிக்கு போடப்பட்டது. அதன்பின்னர் கூடுதல் நகை மற்றும் பீரோ கட்டில் கேட்டு அடிக்கடி மனைவியிடம் விமல்குமார் தகராறு செய்து வந்தார்.
கொடுமை தாங்க முடியாமல் கீதாஞ்சலி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விமல்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விமல்குமார் பெற்றோரை பிரிந்து மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் சென்றார். இருந்தபோதும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். மீண்டும் கீதாஞ்சலி துடியலூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் விமல் குமார் மனைவியிடம், உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு விரும்பமில்லை என்று கூறி சென்று விட்டார்.
இதில் அதிர்ச்சியடைந்த கீதாஞ்சலி இன்று காலை தனது குழந்தைகளுடன் விமல்ராஜின் பெற்றோர்களான நாகராஜ்- பொன்னி வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating