பாகிஸ்தானில் லொறிச் சாரதியாக பணியாற்றும் முதல் பெண்..!! (வீடியோ)
பாகிஸ்தானில் 55 வயதான பெண்ணொருவர் லொறிச் சாரதியாக பணியாற்றுகிறார். ஷமீம் அக்தர் எனும் இப் பெண், பாகிஸ்தானின் முதலாவது பெண் லொறிச் சாரதியாவார்.
சவூதி அரேபியாவில் பெண்கள் காரோட்டுவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், உலகில் பல நாடுகளில் விமானங்கள், பஸ்கள், ரயில்களையும் பெண்கள் செலுத்துகின்றனர். ஆனால், லொறிச் சாரதியாக பெண்கள் பணியாற்றுவது அபூர்வம்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷமீம் அக்தர் சில வருடங்களுக்கு முன் லொறி சாரதியாக பணியாற்ற ஆரம்பித்தார். கணவரின் துணையில்லாத அவருக்கு 5 பிள்ளைகள். திருமண வயதில் 3 மகள்களும் சிறுவர்களான இரு மகன்களும் இருந்தனர்.
ராவல்பிண்டி நகரைச் சேர்ந்த ஷமீம் அக்தர், தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக லொறி சாரதியாக பணியாற்றுவதற்குத் தீர்மானித்தார். அவர் ஏற்கெனவே காரோட்டுவதற்கு கற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், லொறி செலுத்துவதற்கு 8 மாத காலம் பயிற்சி பெற்ற பின்னர் அவர் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் பாகிஸ்தானின் முதலாவது பெண் லொறி சாரதி எனும் பெருமையை அவர் பெற்றார். லொறியை செலுத்துவதுடன் லொறியில் சிறிய பழுதுபார்க்கும் வேலைகளையும் அவர் செய்துகொள்கிறார்.
இஸ்லாமாபாத் போக்குவரத்து பொலிஸாரிடமிருந்து பெற்ற பயிற்சியின் மூலம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு தான் கற்றுக்கொண்டதாக ஷமீம் அக்தர் தெரிவித்துள்ளார்.
லொறி, சாரதியாக அவருக்கு கிடைத்த முதல் வேலை, ராவல்பிண்டியிலிருந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்கு 7000 செங்கற்களை கொண்டு செல்வதாகும்.
தற்போது எந்த வகையான பொருட்கள் ஏற்றப்பட்ட லொறியையும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தயக்கமின்றி செலுத்துகிறார் ஷமீம் அக்தர். அவரை தமது தாய் போன்று கருதுவதாக சக சாரதிகள் கூறுகின்றனர்.
பஸ் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் ஹமீம் அக்தர் பெற்றுள்ளார். தனது வேலையை தான் மிகவும் நேசிப்பதாக அவர் கூறுகிறார்.
”எதையேனும் செய்வதற்கு நீங்கள் உறுதிபூண்டால் எதுவும் கடினமாகாது” என ஷமீம் அக்தர் கூறுகிறார். தனது தொழில் ஏனைய பெண்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கும் என்கிறார் ஷமீம் அக்தர்.
Average Rating