ஸ்மார்ட் வாட்ச் மூலம் காப்பியடித்தது கண்டு பிடிப்பு: பிளஸ்-1 மாணவர் தற்கொலை..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வர்க்கலை அய்யூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது உயர்நிலைப்பள்ளி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார் -மாலினி தம்பதி மகன் அர்ஜூன் (வயது 16) என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அர்ஜூன் நேற்று பிளஸ்- தேர்வு எழுதினார். அப்போது ஸ்மார்ட் வாட்ச் மூலம் பதில்களை பதிவேற்றம் செய்து காப்பியடித்ததாக தெரிகிறது. இதை பள்ளி உதவி முதல்வர் ராஜீவ் கண்டு பிடித்து மேற்கொண்டு தேர்வு எழுத விடாமல் வீட்டுக்கு அனுப்பினார்.
இதில் மனம் உடைந்த மாணவர் வீட்டுக்கு சென்றதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து வர்க்கலை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வர்க்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் பள்ளி துணை முதல்வர் மீது புகார் செய்தனர். அதில் தனது மகன் காப்பி அடித்ததாக வீண் பழிபோட்டு தற்கொலைக்கு தூண்டிய பள்ளி துணை முதல்வர் ராஜீவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பள்ளி துணை முதல்வர் ராஜீவ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating