திருவள்ளூர் தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் மின் தடையால் பிரசவத்தில் குழந்தை பலி..!!
கடலூர் விருத்தாசலம் திட்டக்குடியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி சரண்யா கர்ப்பிணி. இவர் பிரசவத்துக்காக திருவள்ளூர் பெரியகுப்பம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று சரண்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை பிரசவத்துக்காக திருவள்ளூர் மோதிலால் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகபிரசவம் ஏற்படவில்லை.
அதனால் இரவு 9 மணி அளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த டாக்டர்கள் குழந்தை இறந்து பிறந்ததாக கூறினார்கள். இதனால் அங்கு கூடி இருந்த சரண்யாவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சையாலும், ஜெனரேட்டர் இயக்கப்படாததாலும் குழந்தை இறந்தது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை பலியானதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating