ரஜினிகாந்த்தின் யாழ் வருகை இரத்து..!!
தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
வடக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வீடுகள் வழங்கும் நிகழ்வு அடுத்த மாதம் இடம்பெற உள்ளது.
இந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி வைக்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி,
எனது நண்பர் திருமாவளவன் தன்னிடம் இலங்கை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தியதாலும், வைகோ நேரிடையாகவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும், வேல்முருகன் தனது நண்பர் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்ததாகவும் இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.
மேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னது போல மக்களை மகிழ்விப்பது என்னுடைய கடமை.
இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்து, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வரவேற்பு தெரிவித்திருந்தமை கூறத்தக்கது.
Average Rating