சூனியத்தில் ஈடுபட்ட தம்பதியர்! பிள்ளைகள் கண்முன் உயிருடன் எரித்துக் கொலை..!!
சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியினரை அவர்களது உறவினர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் தெலங்கானாவில் இடம்பெற்றுள்ளது.
கே.சுதாகர் (56) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (52) ஆகியோர் சூனியம் செய்வது உள்ளிட்ட மந்திர வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகதெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுதாகர் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டில் தொழில் நட்டம், இறப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளதாகவும், சுதாகரின் சூனிய வேலைகளால்தான் தமக்கு இந்த நிலை ஏற்படுவதாக சுதாகரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் நம்பியுள்ளனர்.
இதனால், இதனைக் கைவிடுமாறு பலதடவைகள் சுதாகரை அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், அவற்றைக் கேட்காத சுதாகரும் அவரது மனைவியும் தொடர்ந்து சூனியம் செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடும் கோபம் கொண்ட சுதாகரின்உறவினர்கள் அவரையும், அவரது மனைவியையும் கம்பம் ஒன்றில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தங்கள் பெற்றோரைத் தாக்க வேண்டாம் என்றும், தாம் அந்த ஊரை விட்டே போய்விடுவதாகவும் சுதாகரின் மகனும் மகளும் அங்கு நின்றவர்களின் கால்களில் விழுந்து கதறியுள்ளனர்.
ஆனால் கோபம் தணியாத உறவினர்கள், மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிருடன் தீவைத்துள்ளனர்.
உடலின் பெரும்பாகம் கருகியிருந்த சுதாகரும் அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating