அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்..!!
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. இதில், இயக்குனர் பாக்யராஜ், பொன்வண்ணன், வி.சேகர், விக்னேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அப்போது, வி.சேகர் பேசும்போது, நான் மக்களுக்கு பிடித்தமான ஜனரஞ்சகமான படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறேன் என்றால், அதற்கு முழு காரணமும் இயக்குனர் பாக்யராஜ்தான். அந்த காலத்தில் அவர் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் ரஜினி, கமல் ஆகியோரும் தயங்குவார்கள்.
இன்றைக்கு பிரம்மாண்ட வசூலை பெற்றுவிட்டதாக கூறப்படும் ‘பாகுபலி’ வசூலை, பாக்யராஜ் அந்த காலத்திலேயே ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் பெற்றுவிட்டார். அதனால், அந்த படத்தை அந்தகாலத்து ‘பாகுபலி’ என்று கூறலாம்.
பாக்யராஜ் ஒரு படத்தில் ஒரு காட்சிக்காகவே 2 மாசம் வரை எடுத்துக்கொள்வார். படத்தை எடுக்கும்போதே, இந்த காட்சியில் ரசிகர்கள் சிரிப்பார்கள்? இந்த காட்சியில் ரசிகர்கள் அழுவார்கள்? என்று சொல்லிக்கொண்டேதான் படத்தை எடுப்பார். அவர் சொன்னதுபோலவே திரையரங்கிலும் நடக்கும். அந்தளவுக்கு ஒரு விஞ்ஞானிபோல் ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து எடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Average Rating