மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் – பிடிவாரண்டு ரத்து..!!
மும்பையை சேர்ந்த பட அதிபர் சகீல் நூரானி. இவர், இந்தி நடிகர் சஞ்சய் தத் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த நடிகர் சஞ்சய் தத்திற்கு, பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 15-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் சஞ்சய்தத் நேற்று அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
அப்போது சஞ்சய் தத்தின் வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும், இனி சரியாக நடந்து கொள்வார் என்றும் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, நடிகர் சஞ்சய் தத்திற்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Average Rating