விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து தாக்க வரும் தெரு நாய்கள்..!!
தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து ‘தெருநாய்கள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பல கலை இயக்குனர்களுடன் உதவியாளராக இருந்த ஹரி உத்ரா என்பவர் இயக்குகிறார்.
அப்புக்குட்டி, பிரதிக், தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அக்ஷ்தா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். ஹரிஷ், சதீஷ் ஆகியோர் இணைந்து இசையமைக்க, தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன் என்ற நிறுவனம் சார்பில் சுசில்குமார், உஷா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறும்போது, தற்போது நம்முடைய நாட்டில் அரசாங்கமும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சேர்ந்து விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி வருகிறது. இதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கதையின் நாயகர்கள்தான்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படமாக இது இருக்கும். ஆனால், இப்படத்தில் எந்த தனிப்பட்ட கம்பெனியையும், தனிப்பட்ட நபரையும் குறிவைத்து படமாக்கவில்லை. இப்படம் விவசாயிகளின் குரலாக ஒலிக்கும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மன்னார் குடியை சுற்றியும் நடந்துள்ளது.
Average Rating