உயிரோடு சமாதி கட்டும் வினோத போராட்டம்: அரசு டாக்டர்கள் நடத்தினர்..!!
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இட ஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் நேற்று 16 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 3-வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசு டாக்டர்கள் உயிரோடு சமாதி கட்டும் வினோத போராட்டத்தை நடத்தினர். கடலூரை சேர்ந்த டாக்டர் ஒருவரை உட்கார வைத்து சமாதி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் கதிர்வேல் கூறியதாவது:-
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க அவசர சட்டம் இயற்றியது போல் மருத்துவர்களின் இடஒதுக்கீடு தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் சட்டசபையை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஆனால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் எங்களது சங்கத்தின் சார்பில் நாங்கள் டாக்டர்களுக்கு சமாதி கட்டும் போராட்டத்தை நடத்தினோம்.
வருங்காலத்தில் தமிழக டாக்டர்களுக்கு உயிரோடு சமாதி கட்டும் நிலை வந்து விடும் என்பதை சித்தரிப்பதற்காகவே இந்த போராட்டத்தை நடத்தினோம். தமிழக சுகாதார துறை சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating