பா.ம.க. மிரட்டல்: குஷ்பு படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு
`பெரியார்’ வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்தப் படத்தில் பெரியார் பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்கிறார். ஞானராஜசேகரன் இயக்குகிறார். பெரியார் படப்பிடிப்பு ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பெரியாரின் இளம்வயது நிகழ்வுகள் செட் போட்டு படமாக்கப்பட்டன. அடுத்த கட்டமாக பெரியார் மணியம்மை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
மணியம்மை பாத்திரத்தில் நடிகை குஷ்புவை தேர்வு செய்துள்ளனர். மணியம்மையாக குஷ்பு நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டசபையிலேயே குஷ்பு நடிப்பதை விமர்சித்தார்.
குஷ்பு ஏற்கனவே கற்பு பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கினார். பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் குஷ்புவை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். கொடும்பாவி எரிப்பு, துடப்பம் ஊர்வலம் போன்றவை நடத்தினர். குஷ்புவுக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடிக்க தகுதி இல்லை என்று எதிர்ப்பாளர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ் பண்பாட்டை கொச்சைப்படுத்திய குஷ்பு மணியம்மையாக நடித்தால் எதிர்ப்போம் என்று நேற்று பா.ம.க.வினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்று ஈரோடு மாவட்ட பா.ம.க. எச்சரித்துள்ளது.
ஆனால் குஷ்புவை மாற்றுவதில்லை என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். சத்யராஜ், டைரக்டர் ஞானராஜசேகரன் ஆகியோர் மணியம்மை பாத்திரத்துக்கு குஷ்புதான் பொருத்தமானவர் என்று கூறிவிட்டனர்.
இதனால் பிரச்சினை பூதாகரமாகி வெடிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் மீதி உள்ளன. மாநாடு, பொதுக்கூட்டம், திருமணம் போன்ற காட்சிகளில் குஷ்பு நடிக்க திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
குஷ்பு காட்சிகளை ஓரிரு வாரத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். மிரட்டல் காரணமாக படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. குஷ்பு நடித்து முடிக்கும் வரை போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து இருக்கும்.