முதலிரவில் மனைவியை தவிக்க விட்டு மாயமான புதுமாப்பிள்ளை எங்கே?..!!
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் அந்தோணி ஜோசப்(வயது 29). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அந்தோணி ஜோசப்புக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அந்த பெண், தனது அத்தை பராமரிப்பில் வளர்ந்து வந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார்.
அந்தோணி ஜோசப்புக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த 3-ந் தேதி பெண் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. அன்று மாலை மாப்பிள்ளை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அங்கேயே அன்று இரவு முதலிரவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு 10 மணி அளவில் முதலிரவு அறைக்குள், மணப்பெண் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அந்தோணி ஜோசப் சில நொடிகள் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் தனக்கு வயிறு வலிப்பதாகவும், அந்த அறையில் இருந்து வெளியில் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், வெளியில் சென்ற அந்தோணி ஜோசப் திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண், நடந்த விவரத்தை கணவரின் தந்தை சவரிமுத்துவிடம் தெரிவித்தார். மணமகன் மாயமான தகவல் அறிந்து கல்யாண வீடே அதிர்ந்து போனது. வெளியில் சென்ற அந்தோணி ஜோசப் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மாயமான அந்தோணி ஜோசப் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருமணமான அன்றே மணமகன் மாயமானதால் இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி மணமகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளார்.
Average Rating