அணு ஆயுத தாக்குதலும் நடக்கலாம்-யுஎஸ் அச்சம்
அமெரிக்கா மீது அணு ஆயுத, உயிரியல் ஆயுத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் தினமான செப்டம்பர் 11 நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடக்கலாம் என்ற பயம் பரவியுள்ளது. இதையடுத்து விமானப் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதைவிட மோசமாக அணு, உயிரியல் ஆயுதங்கள் மூலமான தாக்குதல்கள் நடக்கக் கூடும் என சிஐஏ அமெரிக்க அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து அப்படிப்பட்ட தாக்குதலை தடுக்கவும், அதை எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் மிக ரகசியமாக நடந்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்க உள் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் செர்டாப் கூறுகையில், எந்த வகையான தாக்குதல் நடந்தாலும் அதை சமாளிக்க தயாராக இருக்கிறோம். அது அணு ஆயுத, உயிரியல் ஆயுத தாக்குதல்கள்காக இருந்தாலும் சரி என்றார்.
அமெரிக்கா துறைமுகங்கள், விமான நிலையங்களில் அணு கதிர் வீச்சு அடங்கிய பார்சல்களை கண்டறியும் நவீன ஸ்கேனிங் கருவிகள் பொறுத்தப்பட்டு வருவதாக அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்புத்துறையின் இயக்குனர் வெய்ல் ஆக்ஸ்போர்ட் கூறியுள்ளார்.
அரைகுறை அணு ஆயுதங்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அபாயம் நிறையவே இருப்பதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல மில்லியன் டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நியூயார்க் மக்கள் அவசர காலத்தில் அங்கிருந்து வெளியேற்றப்படும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட ÷வ்டும் என பிரிட்டனின் க்ரீன்விச் பல்கலைக்கழகத்தின் தீ விபத்துத் தடுப்புப் பிரிவின் இயக்குனர் எட்வர்ட் காலியே கூறியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தையொட்டி நியூயார்க்கில் நடந்த ஆய்வரங்கத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
நியூயார்க்கின் பாதாள ரயில் நெட்வோர்க் மிக ஆபத்தானதாக இருப்பதாகவும், தீவிரவாத தாக்குதல்கள் ஏதும் நடந்தால் மக்களை காப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறியுள்ள அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர வழிகள் ஆகியவை அதிகளவில் அமைக்கப்பட வேண்டும் என்றார்.