பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரசுப் பள்ளியை டான்ஸ் பாராக மாற்றிய அவலம்..!! (வீடியோ)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஆரம்ப பள்ளியை ரக்ஷா பந்தன் அன்று உள்ளூர் மக்கள் சிலர் டான்ஸ் பார் ஆக மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு அருகே உள்ள மிர்சாபூரில் உள்ள தேத்ரியா கிராமத்தில், கடந்த திங்கள் கிழமை, ரக்ஷா பந்தன் தினமான அன்றைய இரவில் உள்ளூர் மக்கள் சிலர் அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியை நடன கேளிக்கை விடுதியாக மாற்றினர்.
இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விடுமுறை தினமான ரக்ஷா பந்தன் அன்று, இரண்டு பெண்கள் வகுப்பறையில் உள்ள கரும்பலகையின் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் போஜ்புரி பாடலுக்கு நடனமாடுகின்றனர். அங்கிருந்த சிலர் பணத்தாள்களை அப்பெண்கள் மீது வீசுகின்றனர்.
இச்சம்பவத்தின் மறுநாள் காலையில் பள்ளி அலங்கோலாமாக்கப்பட்டதைக் கண்டு அக்கம்பக்கத்தினரை விசாரித்தனர். அப்போதுதான், பள்ளி கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருந்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதன்பின், பள்ளி நிர்வாகம் கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர்.
கல்வி போதிக்கும் இடத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதனை ஏற்பாடு செய்ததற்கு முக்கிய காரணமாக மிர்சாபூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ராம்கேஷ் யாதவ் எனவும், அவருடைய உறவினர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எனினும், இந்த குற்றச்சாட்டை பஞ்சாயத்து தலைவரின் உறவினர்கள் மறுத்தனர். இந்த சம்பவம் நடைபெறும்போது தான் ஊரிலேயே இல்லை என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆரம்பக் கல்வி அதிகாரி பிரவீன் குமார் திவாரி கூறினார். இச்சம்பவத்திற்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு வட்டார கல்வித்துறை அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.
Average Rating