திருப்போரூர் கோவிலில் 3 மாதம் பிச்சைக்காரராக வாழ்ந்த கோடீஸ்வரர்..!!
திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தீவனூர்பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். கோடீஸ்வரர். இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியவர் என கூறப்படுகிறது.
இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மருமகளுடன் நடராஜனுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்ட நடராஜன் மனைவி மற்றும் மகன்களிடம் ஏதும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் எங்கும் செல்வது என தெரியாமல் பல கோவில் தலங்களுக்கு சென்று விட்டு கடைசியாக திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.
நடராஜனுக்கு திருப்போரூர் கோவில் தலம் பிடித்துவிடவே கோவிலின் வெளிப்புற மண்டபம் பகுதியிலேயே தங்கி கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டு நாட்களை கடத்தினார். பிச்சைக்காரராக கடந்த 3 மாதமாக அவர் அங்கேயே தங்கி இருந்தார்.
இதற்கிடையில் தந்தையை காணாது மகன்களும், கணவரை காணாது மனைவியும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என பல இடங்களில் தேடிவந்தனர். மேலும் பல கோவில்களுக்கு சென்றும் பார்த்தனர். ஆனால் நடராஜனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் காரில் திருப்போரூர் முருகன்கோவிலுக்கு வந்தனர்.
கோவிலுக்கு சென்று விட்டு அருகே உள்ள கடையில் டீ சாப்பிட சென்றபோது தாடி வளர்த்த நிலையில் தனது தந்தையை போல் ஒருவர் அங்குள்ள மண்டபத்தில் உட்கார்ந்திருந்ததை பார்த்தனர்.
அவர்கள் அருகே சென்று பார்த்தபோது தந்தை நடராஜன் உட்கார்ந்து இருப்பதை கண்டு மகன்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதற்குள் காரில் உட்கார்ந்திருந்த மனைவியும் தனது கணவர் கிடைத்து விட்டதை அறிந்து காரில் இருந்து உடனடியாக விரைந்து வந்தார். அவர் தனது கணவரை பார்த்து கதறி அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து அக்கம்பக்கத்தினர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்கலங்கினர்.
பின்னர் நடராஜனிடம் அவரது மகன்கள் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். மனைவி மற்றும் மகன்களின் கண்ணீரால் கோபம் குறைந்த நடராஜன் வீட்டிற்கு வர சம்மதித்தார்.
இதைதொடர்ந்து அங்குள்ள சலூன் கடையில் நடராஜனுக்கு முடிவெட்டி, ஷேவ் செய்து புதுமனிதராக மனைவி மற்றும் மகன்கள் காரில் சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
Average Rating