கேரளாவில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் பேய் திருமணம்..!!
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பேய் திருமணம் எனப்படும் பிரேத திருமணத்தை நடத்தி வருகிறார்கள். இதை வேறு பகுதி மக்கள் மூடநம்பிக்கை என விமர்சித்தாலும் அதை பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை.
திருமணம் ஆகாமலே இறந்து போகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இவ்வகையான திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.திருமணம் முடிந்து விரைவில் உயிரிழந்தவர்களுக்கும் நடத்தப்படுகிறது.
நிஜ திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் மணமேடையில் இருப்பது போல பிரேத திருமணத்தில் அவர்களை போன்ற கொடும்பாவி பொம்மையை நாற்காலியில் உட்கார வைத்து திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இது குறித்து காசர்கோடில் ஆசிரியராக வேலை செய்து வரும் சஜிராக் என்பவர் கூறுகையில், இந்த வினோத திருமணத்தை பற்றி கேள்விபட்டவுடன் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அதன்படி ஊரில் ரமேஷன் மற்றும் சுகன்யாவின் பொம்மைகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இருவருமே மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே உயிரிழந்துவிட்டார்கள். இரண்டு பொம்மைகளுக்கும் வேட்டி சட்டை மற்றும் பட்டுபுடவை என திருமண உடை உடுத்தப்பட்டது.
பின்னர், பெண் வீட்டை நோக்கி மாப்பிள்ளை குடும்பத்தார் சென்றார்கள். அங்கு மாலை அலங்காரம் செய்யப்பட்டு ரமேஷன் மற்றும் சுகன்யாவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அன்றிரவு மாப்பிள்ளை வீட்டருகே உள்ள மரத்தடியில் ரமேஷன் மற்றும் சுகன்யாவின் பொம்மைகள் வைக்கப்பட்டதோடு திருமண சடங்குகள் நிறைவடைந்ததாக கூறியுள்ளார். இப்படி செய்வதால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக இதை செய்யும் மக்கள் நம்புகிறார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்த ஆண் மற்றும் பெண்ணின் ஜாதக பொருத்தம் சரி பார்த்த பின்னரே இருவரின் பொம்மைகளை வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
Average Rating