மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகை புவனேஸ்வரி மகன் கைது..!!
சென்னை ஆதம்பாக்கத்தில் காதல் தகராறில் இந்துஜா என்ற பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அவரை உயிரோடு கொளுத்திய ஆகாஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே, அதே போன்று ஒரு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாக நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை திருமங்கலம் தென்றல் காலனியை சேர்ந்தவர் அனுகிரஹா. இவர் கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். இவருக்கும், வளசரவாக்கத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனுக்கும் (23) இடையே பழக்கம் ஏற்பட்டது. முக நூலில் தொடங்கிய இந்த நட்பு நாளடைவில் நெருக்கமானது.
இதனை தொடர்ந்து மிதுன் சீனிவாசன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுகிரஹாவிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் சீனிவாசன், திருமங்கலத்தில் உள்ள அனுகிரஹா வீட்டுக்கு சென்று பெட்ரோலை ஊற்றி மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளார்.
கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரிக்கு சென்றும் மாணவி அனுகிரஹாவை மிதுன் சீனிவாசன் மிரட்டி உள்ளார். இந்த காட்சிகள் கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக அனுகிரஹா திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். அவரது புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் ஜெயராம் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து திருமங்கலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்தார். கொலை மிரட்டல், ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இணை ஆணையர் சந்தோஷ் குமார், துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், உதவி கமிஷனர் காமில் பாஷா ஆகியோரது மேற்பார்வையில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு மிதுன் சீனிவாசனை இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்தார். ஜாமீனில் வெளி வரமுடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மிதுன் சீனிவாசன் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சட்டப்படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி கூறும் போது, காதல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.
Average Rating