திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.!!
அசாம் மாநில கிராமப் புறங்களில் வறுமையில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்கு பண ஆசைகாட்டி சமூக நல ஆர்வலர்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அதிக அளவில் இந்த சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஆள்பிடிக்க சமூக நல ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு தலா ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது.
அசாமில் கிராமப் புறங்களில் வறுமை நிலவுகிறது. எனவே பண ஆசைகாட்டி சமூக நல ஆர்வலர்கள் திருமணமாகாத இளைஞர்களை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.
திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்று இருப்பதாக போலி சான்றிதழ் தயாரித்து அதன்மூலம் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்கின்றனர். அவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததால் சமூக ஆர்வலர்கள் சொல்வதை கேட்டு இதை செய்கின்றனர்.
இதுபோன்று ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தை பெற முடியாத நிலையை அறிந்து செய்வதறியாது தவிக்கின்றனர். தங்களுக்கு மீண்டும் மறுசீரமைப்பு சிகிச்சை செய்து குழந்தை பெற வழிவகை செய்யவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து அசாம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Average Rating