கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு: வயல்வெளியில் குழந்தை பெற்ற பரிதாபம்..!!
மத்தியப்பிரதேசம் மாநிலம் டின்டோரி மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்கள் அவருடைய குழந்தை வயிற்றினுள் இறந்த நிலையில் உள்ளது எனக்கூறி சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். அவர் பிரசவ வலியால் துடித்த போது அங்குள்ள செவிலியர்கள் அடித்து விரட்டினர்.
வெளியே வந்த அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அவரை அருகிலிருந்த வயல்வெளியில் படுக்க வைத்தனர். வெட்ட வெளியில் சேலையை வைத்து நான்கு புறமும் மறைத்தனர். பின்னர் பெண்ணிற்கு அவர்களே பிரசவம் பார்த்தனர். இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தை உயிருடன் பிறந்தது. அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். அதன் பின் அந்த பெண் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பேசுகையில், ‘இது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிட்டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.
இதே போன்று ஒடிசாவில் பிரசவம் பார்க்க மறுக்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனை அருகே உள்ள கால்வாயில் குழந்தை பெற்ற சம்பவம் மூன்று நாட்களுக்கு முன் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating