ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி
நடிகர் ஆர்யா பங்கேற்கும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்தபோது லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா-த்ரிஷா நடிக்கும் படம் சர்வம். இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் கட்டட வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியாமல் பாதியிலேயே நின்று போன கட்டட வளாகம் இது. இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. படக்குழுவினர் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருந்தனர். மேல் தளத்தில் செட் போட திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குத் தேவையான பொருட்களை தற்காலிக லிப்ட் ஒன்றில் மேல் தளத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் ஒரு கம்பி அறுந்தது. இதையடுத்து மேலிலிருந்து பலத்த சப்தத்துடன் லிப்ட் விழுந்து நொறுங்கியது. இதில் சிகாமணி, உதயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக பலியானார்கள். அப்பு என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து அரங்க மேலாளர் செளந்தரராஜன், லிப்ட் ஆபரேட்டர் முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Average Rating