சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புதிய திட்டம்!!
ஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை ஹாலிவுட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்று இயக்குநர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
`நேரம் முடந்துவிட்டது` என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் முழுபக்க விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், `பொழுதுபோக்கு துறையிலும், பிற துறைகளிலும் உள்ள பெண்களுகளிடமிருந்து, மாற்றத்திற்கான ஒன்றுகூடிய அழைப்பு` என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப்பட தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் குறித்த தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணிகளில் பெண்கள் முன்னேறவும், அடுத்த நிலைக்கு செல்லவும் உள்ள போராட்டங்கள் நிச்சயமாக முடியவேண்டும் என்றும், இந்த உட்புகமுடியாத விளையாட்டு முடிந்தாக வேண்டும் என்று, அந்த திட்டத்தின் இணைய பக்கத்தில் உள்ள மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகளை செய்பவர்கள், அடுத்த நிலையில் சந்திக்கவேண்டிய நடவடிக்கைகளை எதிர்கொள்ளாததினாலேயே இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன என்று அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான, நாட்டலி போர்ட்மேன், ரீஸ் வெதர்ஸ்பூன், எம்மா ஸ்டோன் உள்ளிட்ட பலர் ஆதரிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கான 15 மில்லியன் டாலர் பணத்தில், 13 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுவிட்டன.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண், ஆண் ஆகியோரின் வழக்குகளுக்கு செலவிட இந்த தொகை பயன்படுத்தப்படும்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, வழக்கை பொருளாதார ரீதியாக நடத்த முடியாத நிலையில் தள்ளப்படும் விவசாயம், தொழிற்சாலை, உணவு விடுதிகள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோருக்கு, இந்த தொகை அவர்களின் வழக்கிற்காக பயன்படுத்தப்படும்.
இந்த திட்டம், `பாலியல் ஏற்றத்தாழ்வுகள், பணியிடங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் பேசப்பட வேண்டும்` என்று குறிப்பிடுகிறது.
தாங்கள் சந்தித்த, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொதுவெளியில் தைரியமாக பேசிய பல ஆண், பெண்களை, 2017ஆம் ஆண்டிற்கான மனிதர்களாக டைம் பத்திரிக்கை அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டு, #MeToo என்ற ஹாஷ்டாக் மூலமாக, பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களில் #MeToo என்ற ஹாஷ்டாக் ஆறு மில்லியன் முறை பதிவிடப்பட்டுள்ளது.
Average Rating