இந்தியா, பாகிஸ்தானில் சிறுமிகளிடம் பாலியல் வன்முறை அதிகரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது : ஐநா கவலை!!
டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு 8 மாத குழந்தையை 28 வயதான அதன் உறவினர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல, பாகிஸ்தானில் கடந்த மாதத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஐ.நா. பொது செயலாளர் ஆன்டானியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் கூறியதாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இந்த இரு சம்பவங்களும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் பெண்களுக்கு எதிரான, சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய அனைத்து நாடுகளிலும் இதை நாம் காண்கிறோம். ஐ.நா. பெண்கள் அமைப்பு, ஐ.நா. மக்கள் தொகை நிதியம், யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் அனைத்து நாடுகளிலும், பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு மரியாதை அளிப்பது குறித்து தொடர்ந்து ஐ.நா. நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.பல வளர்ச்சி திட்டங்கள் மூலம் பெண்களுக்கு சமஉரிமை அளித்தல், நல்ல கல்வி மற்றும் சுகாதாரத்தை அளித்தல், அதிகாரமளித்தல் போன்றவற்றை ஐ.நா. கையாண்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating