பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் சிறையில் அடைப்பு
பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர், நாடு திருப்புவதற்கான ஆவணங்கள் இல்லாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் (51) என்பவருக்கு பாகிஸ்தானில் உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்து திங்கள்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவிற்கு திரும்பி அனுப்புவதற்காக வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இந்தியா வருவதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை எனக் கூறி இந்திய அதிகாரிகள் ராம் பிரகாஷை இந்தியாவிற்குள் வர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வாகா எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு ராம் பிரகாஷின் ஆவணங்கள் அனுப்பப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ராம் பிரகாஷ் விடுதலை செய்யப்படுவது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களிடம் தெரிவிக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Average Rating