கண்ணடித்ததால் பட கதையே மாறியது : பிரியா நெகிழ்ச்சி !!
கடந்த வருடம் கேரளாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றவர், பிரியா பிரகாஷ் வாரியர். அப்போது அளித்த பேட்டியில், சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தார். இப்போது அடார் லவ் மலையாள படத்தில் அறிமுகமாகி அதில் தனது கண்ணசைவுகள் மூலம் இணையதளங்களில் வைரலாகி இருக்கிறார். அவர் கூறியதாவது: ஒரு அடார் லவ் படத்தின் பாடல் ஹிட்டாகும் என்று தெரியும்.
ஆனால், உலக அளவில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று கனவில் கூட நான் எதிர்பார்க்கவில்லை. இணையதளங்களின் மூலம் எனக்குக் கிடைத்துள்ள திடீர் புகழையும், வரவேற்பையும் நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலில் ஏதாவது மேனரிசம் செய்ய வேண்டும் என்று டைரக்டர் என்னிடம் சொன்னார். ஐடியாவும் கொடுத்தார். பிறகு என் புருவத்தை உயர்த்தி கண்ணடித்துக் காண்பித்தேன்.
டைரக்டருக்கு இந்த மேனரிசம் பிடித்தது. அந்த நடிகரையும் கண்ணால் பேச வைத்தார். இந்தப் படத்தில் சின்ன கேரக்டரில் நடிப்பதற்குத்தான் என்னைத் தேர்வு செய்தார்கள். நான் கண்ணால் பேசியதால் டைரக்டர் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகி, உடனே ஸ்க்ரிப்ட்டை மாற்றினார். இப்போது என்னை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். தமிழில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி.
இன்ஸ்டகிராமில் 23 லட்சம் ரசிகர்கள்
பிரியாவின் இந்த பாடல் வெளிவந்ததும் இன்ஸ்டகிராமில் அவரை பின்தொடர்கிறவர்கள் 23 லட்சம் பேராக அதிகரித்துள்ளனர். அனுஷ்காவுக்கு 20 லட்சம் பேர்தான் இன்ஸ்டகிராமில் ஃபாலோவர்கள். திரிஷாவுக்கு 15 லட்சம் பேர். பிரபல நடிகைகளையெல்லாம் பிரியா ஓரம் கட்டியுள்ளார். அது மட்டுமல்ல, உலகிலேயே ஒரே நாளில் 6 லட்சத்துக்கு அதிகமான ஃபாலோவர்களை இன்ஸ்டகிராமில் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையையும் பிரியா பெற்றுள்ளார். இந்த வரிசையில் ஏற்கனவே அமெரிக்க டிவி நடிகர் கைலி ஜென்னர் மற்றும் கால்பந்து வீரர் ரொனால்டோ முறையே முதல் இரு இடத்தில் உள்ளனர்.
Average Rating