தெற்கு ஈரானில் பயணிகள் விமானம் விபத்து 66 பேர் உடல்சிதறி பலி!!
ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று, செமிராம் என்ற பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 66 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யாசுஜ் நகரத்திற்கு நேற்று காலை புறப்பட்டு சென்றது. யாசுஜ் நகரை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானம் ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது. நீண்ட நேரமாகியும் விமானத்தின் சமிக்ஞை கிடைக்காததால், அப்பகுதிக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது. அசமென் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், இரட்டை இன்ஜின்களை கொண்ட டர்போபிராப் ரக விமானம். இந்த வகை விமானங்கள் குறுகிய தூர பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து அசமென் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் முகமது தாகி டபாதாபாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 60 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக சாக்ரோஸ் மலைப்பகுதியில் 440 மீட்டர் உயரமுள்ள தேனா மலையில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது” என்றார். அதிகமான பனிமூட்டம் காரணமாக மீட்பு பணிகளுக்காக சாக்ரோஸ் மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டர்களை அனுப்புவது தாமதமானதாக ஈரான் தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன. விமான விபத்து குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைகள் அடர்ந்த செமிராம் பகுதியில் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளதால், அங்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப இயலாது. அதனால் அங்கு மீட்புப்பணிக்காக ஹெலிகாப்டர்கள் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். பல்வேறு சர்வதேச பொருளாதார தடைகள் காரணமாக ஈரானில் விமான சேவை மிகவும் செயலிழந்து காணப்படுகிறது. இதனால் சமீபகாலங்களில் அங்கு அதிகமான விமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 2015ல் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தையடுத்து, விமானங்களை வாங்க பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஈரான் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating