(மகளிர் பக்கம்)பெண்களுக்கான இணையதளம்!!
வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் இணையதளம் என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத தேவையாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் பயன்பெறும் பல்வேறு இணையதளங்களை உருவாக்கி இருக்கிறது. அரசு அறிவிப்புகள், நலத்திட்டங்கள், கல்வி உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்து இயங்கும் இணையதளங்கள் இயங்கி வருகின்றன.
அதன் அடிப்படையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெறும் விதமாக ‘நாரி’ பெண்களுக்கான தேசிய தகவல் களஞ்சியம் எனும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களாக வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், மாநிலங்களில் உள்ள பெண்களுக்கான உதவி வழங்கும் தொலைபேசி எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. பெண்களின் வேலைவாய்ப்புக்கான சிறப்பு அம்சமும் இதில் உள்ளது. நேர்காணல்கள், முதலீடு, சேமிப்பு ஆகியவை குறித்த அறிவுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நலத்திட்டங்கள் தாண்டி, ஊட்டச் சத்துக்கான குறிப்புகள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள், ஆபத்தான நோய்கள் குறித்த தகவல்கள் ஆகிய உடல் நலன் சார்ந்த விஷயங்களும் இதில் அடங்கியிருக்கிறது.
இவை தவிர வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கும் விதிமுறைகள், பாஸ்போர்ட் பெறுவது ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இப்படியான 350 திட்டங்கள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தில் பெண்களின் வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் மாநிலத்தைப் பொருத்தும், என்ன உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த இணையதளம் மூலம் அனைத்து மக்களும் பயன் பெறமுடியும் என்றாலும் இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்தி தவிர்த்த பிற மொழி மக்களுக்கு இந்த சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். அனைத்து மாநில மொழிகளிலும் தொகுக்கப்பட்டிருந்தால் இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்திருக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
Average Rating