பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 12 வருட கடூழியச் சிறை; 25,000 ரூபா அபராதம்
நான்கு வருடங்களுக்கு முன்னர் 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவருக்கு அம்பாறை மேல்நீதிமன்றம் 12 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2004 ஜனவரி 14 ஆம் திகதி அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை பண்டாரதுவே நஞ்சரத்ன தேரோ என்ற புத்த பிக்கு பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று புதன்கிழமை அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியால் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சந்தேகநபரான பௌத்த பிக்குவுக்கு 12 வருட கால கடூழியச் சிறைத் தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை மேலும் மூன்று வருடங்களுக்கு அதிகரிக்கப்படுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
Average Rating